Toppers List பேனர் வைத்த நர்சரி: குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா?
ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நர்சரி குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும், மாணவர்களிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தவே போதிக்கப்படுகிறது. ஆனால், சில பள்ளிகளில் கல்வி என்பது மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தி விடுமோ என்று பயத்தை ஏற்படுத்துகிறது இந்த நிகழ்வு.
10 மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட பொதுத்தேர்வுகளுக்கு மட்டுமே முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் அல்லது அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் பள்ளிகளுக்கு முன்பாக பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். முக்கியமாக அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளின் முன்பாக இதுபோன்ற பேனர்களை நாம் காணலாம்.
ஆனால், ஹைதராபாத் கோதாபேட்டில் உள்ள ப்ரியா பாரதி உயர்நிலைப் பள்ளியில், நர்சரி வகுப்பு குழந்தைகளுக்கு தரவரிசைப் பட்டியல் (Toppers List) பேனர் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்சரி (ப்ர.கே.ஜி), எல்.கே.ஜி, யூ.கே.ஜி மற்றும் முதலாம் வகுப்பு குழந்தைகளுக்கான தரவரிசைப் பட்டியல் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நர்சரி வகுப்பில் உள்ள குழந்தைகளின் எந்த அறிவை வைத்து ஆசிரியர்கள் இவ்வாறு தரவரிசைப் பட்டியலை உருவாக்குவார்கள்? ஒரு சில குழந்தைகளை மட்டும் அழைத்து பாராட்டும் போதும், இதுபோன்று பேனரில் சில குழந்தைகளின் புகைப்படம் இடம்பெறும் போது இது அந்தக் குழந்தைகளின் மனதில் ஒரு பிரிவினையை மற்றும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்று நெட்டிசன்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment