அரசு துறைகள், கல்வி நிலையங்களில் குழந்தைகளை வேலையில் சேர்க்க தடை
சென்னை: 'பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு துறைகளில், எந்த இடத்திலும், குழந்தை தொழிலாளர் முறை இருக்கக் கூடாது' என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும், குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள், தொழிலாளர் நல ஆணையர் வாயிலாக, அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள், அரசு துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.விதிமுறைகள் என்ன?
● அனைத்து அலுவலகங்களிலும், அரசு துறைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை இருக்கக்கூடாது. ஆபீஸ் பாய் வேலை, சாதாரண திறன் சாராத தொழில்களில் ஈடுபடுத்துவது, அலுவலக ஊழியர்களுக்கு உதவியாளர் என, அனைத்து நிலைகளிலும், சிறுவர், சிறுமியரை பணியமர்த்த கூடாது
● நிரந்தரமாகவோ, தினக்கூலி அடிப்படையிலோ, குழந்தைகளை வேலைகள் செய்ய பணிக்கக்கூடாது
● அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்டவற்றின் கேன்டீன்கள், விடுதிகள் போன்றவற்றின் சாதாரண வேலைகளுக்கு கூட, அவர்களை பயன்படுத்த கூடாது
● விதிகளை மீறி, குழந்தைகளை வேலைக்கு பயன்படுத்துவது கண்டறியப் பட்டால், மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment