'பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்'
நாமக்கல்: ''பள்ளி மாணவ, மாணவியர், 35 லட்சம் பேருக்கு, முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார். இதுகுறித்து, மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கு, துறை செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முகக் கவசம் இன்றியமையாதது. இதுகுறித்த விழிப்புணர்வை சமூக நலத்துறை ஏற்படுத்தி வருகிறது. சமூக நலத்துறைக்கு உட்பட்ட, 98 தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம், இரண்டு லட்சம் முகக் கவசங்கள், தரமான துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க, மாணவ, மாணவியர், 35 லட்சம் பேருக்கு, முகக் கவசங்கள் தயாரித்து வழங்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.