நாம் சந்திப்பவருக்கு பாதிப்பு இருக்கலாம்! முகக்கவசம் உயிர் கவசம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, June 9, 2020

நாம் சந்திப்பவருக்கு பாதிப்பு இருக்கலாம்! முகக்கவசம் உயிர் கவசம்

நாம் சந்திப்பவருக்கு பாதிப்பு இருக்கலாம்! முகக்கவசம் உயிர் கவசம்
சென்னை : ''மற்றவர்களால் உங்களுக்கும், உங்களால் மற்றவர்களுக்கும், கொரோனா பரவாமல் இருப்பதற்கு, அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்,'' என, கொரோனா தொற்று பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் பேசினார்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த, விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கபசுர குடிநீர், ஹோமியோபதி மருந்து மற்றும் விட்டமின் மாத்திரைகள் வழங்கி, அவர் பேசியதாவது:கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை பார்த்து, பயப்பட வேண்டாம்; அதிக அளவில் பரிசோதனை செய்யும் போது, எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும்.சென்னையில் மட்டும், 10 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர்.இதுபோன்ற, 'பாசிட்டிவ்' ஆன விஷயங்களை பார்த்தால் நம்பிக்கை வரும்.இன்றைய தேதிக்கு, நாம் சந்திக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் கொரோனா நோயாளியாக இருக்கலாம்; ஆனால், அது அவருக்கே தெரியாமலும் இருக்கலாம்.தெரியாது என்பதற்காக, கொரோனா பரவாமல் இருக்காது. இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா வந்துவிட்ட பின், சிரமப்படுவதை விட, வராமல் தடுப்பதே சிறந்த வழி.அதற்கு அடிக்கடி கைகழுவுவது; சுத்தம் பேணுவது ; ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவை சாப்பிடுவது முக்கியம். இது, எல்லாவற்றையும் விட முக்கியம், முகக் கவசம் அணிவது.சென்னையில் பல இடங்களுக்கு களப்பணிக்கு செல்கிறேன். போன இடங்களில் பார்த்தவரை, பொதுமக்களுக்கு இன்னும் முகக் கவசம் பற்றிய, போதிய விழிப்புணர்வு வரவில்லை என்றே தெரிகிறது.மற்ற விஷயங்களில் அலட்சியமாக இருப்பது போல, முகக் கவசம் அணியும் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்; இது உங்களை, உங்கள் குடும்பத்தினரை காப்பாற்றும் நடவடிக்கை.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் பேசினார்.இதற்கிடையில், 'கட்டாயம் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து தான், மது வகைகளை விற்க வேண்டும்' என, 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு, மேலாண் இயக்குனர், கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், 'குடி'மகன்களும், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பு நடைமுறைகள், அனைத்து கடைகளிலும் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என, ஆய்வு செய்யும்படி, மாவட்ட மேலாளர்களையும், அவர் அறிவுறுத்தியுள்ளார். தலைமை செயலகத்தில் 70 பேருக்கு கொரோனா?சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஊழியர்கள் அச்சத்துடனே, அலுவலகம் வந்து செல்கின்றனர். இதற்கிடையில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அனுப்பியுள்ள மனு: தலைமை செயலக பணியாளர்கள், 50 சதவீதம் பேர், தினமும் பணிக்கு வருகின்றனர். கடந்த வாரங்களில், தலைமை செயலகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அவர்களுடன் பழகிய, மற்ற பணியாளர்கள், நோய் தொற்றை, தங்கள் குடும்பத்தினருக்கும், உடன் பணி செய்வோர் மற்றும் பயணம் செய்யும் பிறருக்கும், பரப்பும் அபாயம் உள்ளது. நோய் தொற்று சமூக பரவலாக பரவாமலிருக்க, ஊரடங்கு முடியும் வரை, 50 சதவீத பணியாளர்களுக்கு பதிலாக, 33 சதவீத பணியாளர்களை மட்டும், பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.மேலும், அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, கொரோனா நோய் தொற்றுள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad