தனியார் கல்வி கட்டணம் 60 சதவீதம் வரை குறைப்பு?

சென்னை: கொரோனா விடுமுறையால், தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, பாதிக்கும் மேல் குறைக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்வி நிறுவனங்கள், விடுமுறையில் உள்ளன. தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் வகுப்புகள் துவங்கவில்லை.
அனுமதி
முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக, பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் கட்டணம் வசூலிக்க, அனுமதி கோரப்பட்டுள்ளது. பெற்றோர் கட்டணம் செலுத்தாவிட்டால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசே சம்பளம் வழங்க முன்வர வேண்டும் என, பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், ஊரடங்கு காரணமாக, தொழில்கள் முடங்கியதால், கல்வி கட்டணம் செலுத்த, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, 30க்கும் மேற்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கும், உச்ச நீதிமன்ற வழக்குகளுடன் சேர்க்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விருப்பம் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்க, பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கமான கட்டணத்தை விட, 60 சதவீதத்துக்கும் குறைவான கட்டணமே வசூலிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கலாம் என்றும், பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
பராமரிப்பு
பள்ளிகள் இயங்காததால், வாகன போக்குவரத்து செலவு இல்லை. பள்ளிகளின் பராமரிப்பு செலவும், அடிப்படை வசதிகளுக்கான செலவும் இல்லை. மேலும், பல பள்ளிகள் சம்பள குறைப்பும் செய்துள்ளன.இதன்படி, பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும், 'ஆன்லைன்' வகுப்புக்கான கட்டணத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் வகையில், முந்தைய ஆண்டை விட, 60 சதவீதம் குறைத்து, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கலாம் என, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுஉள்ளது.
0 Comments:
Post a Comment