கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்திடும் உன்னதமான மூலிகைப் பொருளாக வெட்டிவேர் திகழ்கிறது.
மருத்துவப் பயன்கள்
தலைமுடி தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாத்திடும் தன்மை கொண்ட இவ்வேரை தண்ணீரில் ஊறவைத்து, 30 மி.லி – 60 மி.லி வரை உணவுக்குப்பின் அருந்தி வர காய்ச்சல், செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் சிறுநீரக எரிச்சலும் குணமாகும். குழந்தைகளுக்கு 10 மி.லி. முதல் 20 மி.லி. தரலாம்.
வெயில் காலத்தில் நம்மைப் பயமுறுத்துகிற வியர்குரு, முகப்பரு ஆகியவை குணமாக, வெட்டி வேர், விலாமிச்சை, பாசிப்பயிறு, சந்தனம் ஆகியவற்றை தூளாக அரைத்து, அதனுடன் பன்னீர் கலந்து தடவி வர, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுத்தமான தேங்காய் எண்ணெயில் வெட்டிவேரை ஊற வைத்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.
வெட்டிவேரினால் செய்யப்படும் நாற்காலிகள், மூலநோயின் தீவிரத்தைக் குறைத்து அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது. வெட்டிவேரைக் கொண்டு செய்யப்படும் விசிறிகள் உடல் எரிச்சல், தேக சூட்டினை நீக்கி, மனம் புத்துணர்வு அடைய செய்கின்றன. கோடைக்காலத்தில் வெட்டிவேரைக்கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டிவர, அறையின் வெப்பத்தைக்குறைத்து நறுமணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.