புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களுக்கு எப்போது தேர்வு ? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்.



பிளஸ் 2 மாணவர்களின் எதிர்காலம் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல் நலனும், உயிரும் முக்கியம் என்று கருதுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொற்றுப் பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்துத் திருச்சியில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், கல்வி ஆண்டு முடிந்துவிட்டதால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுள்ளீர்கள். கரோனா நோய் நம் அனைவருக்குமே புதிதுதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசின் அனைத்துத் துறையினருக்குமே நடைமுறைச் சிக்கல் உள்ளது. கரோனா காலமாக இருப்பதால் குறிப்பிட்ட காலம் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் எவ்வளவு விரைவாகக் குறைகிறதோ, அதற்கேற்ப விரைவாக பிளஸ் 2 தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், மாணவர்களின் எதிர்காலம் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல் நலனும், உயிரும் முக்கியம் என்று கருதுகிறோம்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில் குழுவின் அறிக்கை வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை அனைவரும் பார்ப்பீர்கள்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive