பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்


தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI
The Union Government's Unique Identification Authority of India presented the Achievement Award to the School Education Department of the Government of Tamil Nadu.

பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்டதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசின் UIDAI பாராட்டு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” எனும் இத்திட்டம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.72 நாள்.11.03.2024-ல் வெளியிடப்பட்டது.

இத்திட்டமானது தொடர்ந்து 2024-25-ஆம் கல்வியாண்டில் ஆதார் பதிவு மேற்கொள்பவர்களைக் கொண்டு இப்பணி அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக நாளது வரை ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,12,81,426

ஆதார் புதிய பதிவு மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை:13,437

கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை : 16,06,961

ஏற்கெனவே புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்களில் கண்டறியப்பட்டவர்கள் : 62,25,210

ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீத மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இத்திட்டத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.

பள்ளிக் குழந்தைகளின் நலனிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிடுவதுடன் “பயிலும் பள்ளியிலேயே ஆதார்” என்ற இச்சிறப்புத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவரும் அழைக்கப்படாமல் அவரவர் பயிலும் பள்ளியிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த இலக்கினை தமிழ்நாடு மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையமானது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive